Friday, February 23, 2018

தமிழ்ப் பக்தி புலவர் ஆண்டாள் யார்?


தந்தி தொலைக்காட்சி வரலாறு பேராசிரியர் எம். ஜி. நாராயணனிடம் எடுத்த பேட்டி அடங்கிய‌ யு ட்யூப் காணொளி இணைப்பை தன் திண்ணைக் கட்டுரையில் திருமதி சாரநாதன் கொடுத்தமைக்கு நன்றிகள் பல.  ஆனால் பேராசிரியர் சொன்னதை தங்கள்தங்கள் வசதிக்குத் தக்கவாறு எடுத்துக்கொள்கிறார்கள்.

பேராசிரியர் நாராயணன் சொல்வது:  தானும் தன் மாணாக்கன் கேசவனும் சேர்ந்தளித்த கட்டுரையே அது.  ஆண்டாள் திருவரங்கத்தில் வாழ்ந்த தேவதாசி என்று எந்த ஆதாரத்தை வைத்துச் சொன்னீர்கள் ? என்ற கேள்விக்கு:  “ 7-8 நூற்றாண்டுகளில் தமிழக கோயில்களில் தேவதாசி குடும்பங்கள் வாழ்ந்தன.  அக்குடும்பத்துப் பெண்கள் தங்களை இறைவனுக்கு அர்ப்பணித்து தேவதாசிகளாக வாழ்ந்தார்கள்.  சரி! அப்படி தேவதாசிகள் உண்மையில் இருந்தார்கள் என்பதற்கு ஏதேனும் நிரந்தர ஆதாரங்கள் (கல்வெட்டுக்கள்; இலக்கிய சான்றுகள்) உண்டா? என்று கேட்டதற்கு (இதை அழுத்தி திரும்பத்திரும்ப நிருபர் கேட்கிறார்: அவரின் உள்ளோக்கம் ''இல்லை'' என்ற சொல்லை உருவ‌ அதுவே தலைப்புமாக தந்தி காணொளி வைக்கிறது!) நாராயணன் பதில்:  ‘’அப்படியெல்லாம் சானறுகள் இல.’’  பின் எதை வைத்துச்சொல்கிறீர்கள்? என்ற கேள்விக்கு: ‘’வழிவழி வந்த வாய்சொல்படி (oral tradition) என்பது நாரயாணன் சொல்லிங்கே) மற்றும் கர்ண பரமபரை வ்ரலாறு (Legends) என்பது நாராயணன் வைக்கும் சொல் இங்கே)  இதன்படி அப்படி அனுமானம் செய்ய (நாராயணன் வைக்கும் சொல் Interpretations) முடிகிறது’’.

இக்காணொளியில் நாராயணன் தன் இன்டர்ப்ரடேஷனை மறுக்கவேயில்லை. மேலும் சொல்கிறார்: ஆய்வுகள் நான் காட்டிய வழியில் தொடர்கின்றன என்று முடிக்கிறார்.

நாராயணன் போன்றவர்களாவது வாய்வழி வந்த பாரம்பரியம் (oral tradition), மற்றும் கர்ண பரம்பரை நம்பிக்கை (Legend) இவற்றை வைத்துப் பேசி இன்னும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன இவ்வழியே என, இங்கு எழுதும் திருமதி சாரநாதன் மற்றும் அவர் ஆதாரவாளர்கள் வைக்கும் ஆதாரங்கள் பெரியாழ்வாரின் பாசுரமும் மற்றும் விட்டுச்சித்தன் மகள் கோதை சொன்ன என்று முடியும் தனியனகளுமே ஆகும். 

எடுத்து வளர்த்த மகளை எவரும் 'எடுத்து வளர்த்த மகள்என்று எப்போதும் சொல்ல மாட்டார்கள்;  மகள் என்றே சொல்வார்கள்.  குழந்தைக்காக ஏங்கிய பெரியாழ்வார் பச்சை மதலையாகக் கண்டெடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்து விட்டு, ‘’எடுத்து வளர்த்த மகள்’’ என்று விட்டேத்தியாக பேசுவாரா

குருபரம்பரா பிரபாவம் சொன்ன வரலாறு என்னவெனில் பெரியாழ்வார் அவரின் நந்தவனத்தில் தற்செயலாகக் கண்டெடுக்கப்பட்ட ஓர் குழந்தை; அதற்கு ஆண்டாள் எனப் பெயரிட்டு வளர்த்தார்.  இதுவே.  இதை வைத்தே பெரியாழ்வாரின் பாசுரத்தின் மகள் என்ற சொல்லை பார்க்கவேண்டும்.

திருப்பாவைக்கும் நாச்சியார் திருமொழிக்கும் ''தனியன்கள்'' எழுதியது ஆண்டாளே என்பது வேடிக்கையான பேச்சு!  ஏனெனில் வைணவ சம்பிரதாயமே தனியன்களை எழுதியவர்கள் ஆச்சாரியர்களே என்று சொல்கிறது.  இவ்வுண்மையை என் திண்ணைக்கட்டுரையில் காட்டியிருக்கிறேன்.

ஆக, ஆண்டாள் பெரியாழ்வாரருக்குப் பிறந்த குழந்தை என குருப்ரம்பரா பிரபாவமே சொல்லவில்லை.  பாசுரங்களும் சொல்லவில்லை.  நாராயணன் சொல்லும் இன்ட்ரப்ரடேஷனைத்தான் வைரமுத்துவும் செய்கிறார்.  அதை அவரே பண்ணியிருக்க வேண்டும்.  நாராயணன் சொன்னதாகச் சொல்லாமல். 

வரலாற்றாய்வாளர்கள் பலவகைத் தரவுகளைத் தேடுவார்கள்: கல்வெட்டுக்கள்; நாணயங்கள்; புதையுண்ட நகரங்கள்; ஊர்கள் (கீழடி போன்று).  இவைக்குப் பின் அக்கால கட்டத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள்.  சங்க காலத்தில் தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிய பிற சான்றுகள் கொஞ்சமே;  எனவே சங்கப்பாடல்களை வைத்தே ஆராய்கிறார்கள்.

இதே நிலைதான்: ஆழ்வார் காலத்துக்கும்.  ஆழ்வார்கள் யாரார்? எப்படி, எங்கே வாழ்ந்தார்கள்? என்ற கேள்விகளுக்கு வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்கள் அரிது.  எனவே அவர்கள் பாடல்களில் தேடவேண்டிய நிலை வருகிறது.  ஆண்டாள் காலமெது? என்ற ஆராய்ச்சியையே அன்னாரின் பாடல்கள் மூலமாகத் தேடி திருவாங்கூர் பலகலைக்கழக தமிழ்ப்பேராசிரியர் மு இராகவையங்கார் எழதிய ஒரு சிறப்பான நூல் '' ஆழ்வார்கள் காலநிலை'' .   கல்விக்கடல் கோபாலைய்யர் ஒரு மாபெரும் வைணவ அறிஞர்; அவர் எழுதியதை (''எம்பெருமானாரும், திருவாய்மொழியும்''  - கல்விக்கடல் கோபாலைய்யர்.  கலா சம்பரக்சன சங்கம், செல்வம நகர், தஞ்சாவூர் உருபா 35 மட்டும்.) மேலும், தமிழ் மண் பதிப்பகம், சிங்காரவேலர் தெரு, தி நகர் சென்னை வெளியிட்ட இவரின் கட்டுரைத்தொகுப்புக்கள் நான்கு) அடிப்படையாக வைத்தே என் திண்ணைக்கட்டுரை வரையப்பட்டது. இவர், ஆழ்வார்களில் பாடல்களின் காணப்படும் சொல்லாடல்களை வைத்து அக்காலத்தில் தமிழரின் சமூக வாழ்க்கைப் பழக்கங்கள் இவை காட்டுகின்றன‌ என சொல்வதும் இரசிக்கதக்கது. தன்னை தலித்து என்று திருமழியிசையாழ்வாரே பாடலில் சொல்லிவிட்டதாலே அவரின் ஜாதியை குலத்தை (அவர் சொல்லின்படி ''குலமில்லா’’ கீழ்நிலையை) நாம் அறிகிறோம்.  அதே சமயம், இன்னொரு தலித்து என்று ஏற்கப்படும் திருப்பாணாற்றாழ்வாரின் ஜாதி அவரின் பாடல்களில் காட்டப்படவில்லை. பாடல்கள் பத்தே பத்து.  வைணவ ஆச்சாரியார்கள் சொல்லி அவரை தலித்து என்கிறார்கள் வைணவர்கள்.  குருபரம்பரா பிரபாவம் ஒரு வரலாற்று நூல் இல்லையெனபதால் அவரை தலித்து என்பதற்கு ஆதாரமேயில்லை. எனவே ஆழ்வார்கள் பாடல்களே தரவுகள்

ஆழ்வார்கள் காலத்துக்குப் பின் பல நூற்றாண்டுகள் சென்ற பின் எழுதப்பட்ட நூலே குருபரம்பரா பிரபாவம்.  இது எழுதப்பட்ட நோக்கம் ஆழ்வார்களின் வாழ்க்கையை வரலாற்று ஆராய்ச்சியாகச் சொல்ல அன்று. மாறாக, ஆழ்வார்கள் வைணவ சம்பிரதாயத்தில் வைக்கப்பட்ட பின்னர் அவர்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்தவே.  கொஞ்சம் கற்பனை பண்ணுங்கள்:  இப்பன்னிரு ஆழ்வார்கள் வெறும் திருமால வழிபாட்டாளர்கள்; தங்கள் பக்தியை பாடல்களாக வெளிப்படுத்தினார்கள் என்றுமட்டும் விடப்பட்டு, வைணவ சம்பிராதாயத்தில் வைக்கப்படாமல் போயிருந்தால், குருபரம்பரா பிரபாவமே எழுதப்பட்டிருக்காது.  தேவையேயில்லாமல் எவரெழுதுவார்?

எனவே ஆழ்வார்கள் அனைவரும் அவதாரங்களாக்க வேண்டிய கட்டாயமேற்பட்டது.  பூதேவியின் அவதாரமே ஆண்டாள் என்பது குரு பரம்ப்ரா பிரபாவம் சொன்னது.  வரலாற்றாசிரியர்கள் குருபரம்பரா பிரபாவத்தை எடுப்பதே இல்லை. அது ஒரு ஹேகியோக்ராஃபி (Hagiography) என்று நன்கு தெரிவதால்.  ஹேகியோக்ராஃபிகள் மதத்தலைவர்கள்; பக்தர்கள்; மகான்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்தும் நோக்கத்தில் தங்கள்தங்கள் மதத்தவராலேயே எழுதப்படுபவை.  கத்தோலிக்கத்தில் புனிதர்கள் வரலாறு கத்தோலிக்க சபையால் எழுதப்பட்டது.  அது வரலாற்று ஆதாரமாகாது. அதே போல குருபரம்பரா பிரபாவம் வரலாறு அன்று.  வைணவர்களுக்காகவே எழுதப்பட்ட பக்திப்பனுவலது.  அப்படியே ஒரு வரலாற்றாசிரியர் எழுதினாலும் அதை மதம் ஏற்காது.

ஆண்டாளின் வரலாறு, இறுதியாக அவரின் பாடல்களின் இருந்தே தெரிய வேண்டும். அங்கேதான் வருகிறது இன்ட்ர்ப்ரெடேஷன்.  அதை எல்லாரும் அவரவருக்கு இயன்ற வரை செய்ய முடியும்.  பெரிய தமிழறிஞரும் இலக்கிய ஆர்வமும் உடையவராயிருந்தால் அதை நன்கு செய்ய முடியும்.  வைரமுத்து சொல்லியபடியே சொன்னால், வைணவர்களோ, இந்துமத பற்றாளர்களோ இதைச் செய்ய முடியாது.  அவர்களுக்கு வேண்டியது ஹேகியோக்ராஃபிதானே? வரலாறு எதற்குமற்றவர்கள்:  ஆணாதிக்க சிந்தனை பற்றி ஆராய்வோர் (இங்கு நாம் ஒரு முற்கால பெண் புலவரைப்பற்றி தெரிய விரும்புவதால்); சமய, சமூக மறுப்பாளர்கள் என்பது அவர் சொல்; அதை மாற்றி எச்சமயத்தையும் சாராதவர்கள்; கசப்போ, கரிப்போ, தனக்கு என்ன தெரிய வந்தது என்பதை காய்தல் உவத்தலின்றி தைரியமாகச் செய்வார்கள்.  எல்லாருக்கும் உரிமை உண்டு. 

ஆராய்ச்சிகள் இதை ஒரு கோடாகக் கொண்டு தொடரட்டும் என்று பேராசிரியர் நாராயணன் சொன்னதைப்போல நாமும் நம்புவோமாக.


*****

Tuesday, January 16, 2018

தமிழ் இலக்கியமும் மதவாதிகளும்

தமிழ் இலக்கியமும் மதவாதிகளும்


தமிழ் இலக்கியம் - சங்க காலம்சங்கம் மருவிய காலம்; காப்பிய காலம்; பக்தி இயக்க காலம்; சிற்றிலக்கிய காலம் விடுதலை போராட்ட காலம்; விடுதலை பெற்ற காலம்தற்காலம் - என்று தனித்தனியே ஒன்றன்பின் ஒன்றாக‌ வளர்ந்து வந்திருக்கிறது.   இவற்றுள் மாபெரும் சிறப்பு வாய்ந்த நூல்கள் பலபல‌.  பக்தி இயக்க கால இலக்கியம் சமய இலக்கியமெனப் போற்றப்பட்டு, தமிழ்மொழியின் இலக்கிய கட்டமைப்பு அடிக்கற்களுள் ஒரு பெரிய அடித்தளமாக விளங்குகிறது.  இக்காலப் பாடல்கள் இந்துக்கடவுளர்களாகிய சிவனையும் திருமாலையும் தனித்தனியாக போற்றிப்பாடப்பட்டவை.  இவர்கள் எத்தனை எத்தனை புலவர்கள் என்று நமக்குத் தெரியாது. ஆனால். இவர்களுள்  சமயக்குரவர் நால்வர் என்ற சிவனைப்பாடிய சைவப்புலவர்களும்; ஆழ்வார்கள் எனவழைக்கப்படும் வைணவப்புலவர்கள் பன்னிருவரும் இன்று சமய இலக்கியம் யாத்தவர்கள் எனவறியப்படுகின்றனர். 

எல்லா கால இலக்கியநூல்களும் தமிழரின் இலக்கிய பெட்டகங்களாக போற்றப்பட்டு வாசிக்கப்பட்டு வருகின்றன.  உலகமெங்கும் வியாபித்துள்ள தமிழர்கள் - மதம், சாதி கடந்து - அனைத்து கால இலக்கியத்தை த‌ம் முன்னோர் விட்டுச்சென்ற விலைமதிக்க முடியா சொத்து, பிறமொழிகளில் இப்படி கிடைக்காதென்றெல்லாம் பெருமைப்பட்டு தமிழின்பத்தை நுகர‌ வழி செய்கிறது. 

பக்தி இலக்கியத்தின் இன்றைய நிலையென்னசைவக்குரவர்கள் யாத்த தேவாரம், திருவாசகம் சர்ச்சைக்குள்ளாகவில்லை. ஏனென்று என்னை வாசிக்கும்போது புலப்படும்.  வைணவப்புலவர்கள் யாத்த 4000 க்கும் மேற்பட்ட பாடல்கள் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன.

7ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வாழ்ந்த ஏராளம் திருமால் வழிபாட்டுப் புலவர்கள் அனைவரும் எழுதியவை எங்கே போயின‌? தெரியவில்லை.  ஆனால் அவர்களுள் பன்னிருவர் யாத்தவை இன்று கிடைக்கின்றன.  காட்டுமன்னார் கோயிலைச் சேர்ந்த ஒரு வைணவ ஆசிரியர் பன்னிரு புலவர்கள் எழுதியவைகளைத் தொகுத்தார்;  இது நடந்தது 10ம் நூற்றாணடு.  அதாவது பன்னிரு புலவர்களுள் கடைசிப்புலவர் வாழ்ந்த காலம் 9ம் நூற்றாண்டு.  அவருக்குப் பின் ஒரு நூற்றாண்டு கழித்து இப்பாடல்கள் ஒரே தொகுப்பில் வைக்கப்பட்டன.  எப்புலவரின் பாடல்கள் முதலில் வைக்கப்படவேண்டுமென்று என்ற வரிசையும் இத்தொகுப்பாளரால் முடிவு செய்யப்பட்டது.  இப்பாடலகளை அவர் தொகுக்க ஒரே காரணம் அல்லது முதற்காரணம் பன்னிருவரும் திருமாலையே முழமுதற்கடவுளாகக் கொண்டு வேறெந்த தெயவத்தையும் ஏத்தாமல் பாடியது.  பக்தி இயக்க காலத்தில் இப்படி ஒரே கடவுளை (திருமாலை) எடுத்துப் போற்றிப் பாடியவர்கள் இவர்கள் பன்னிருவர்தான் போலும்! அல்லது இவர்கள் மட்டுமே தொகுப்பாளருக்கு கிடைத்திருக்க வேண்டும்.  அன்று வாழ்ந்த - 7லிருந்து 9ம் நூற்றாண்டுவரை - ஒரு பன்னிருவர் மட்டும்தான் திருமாலையே ஏத்திப்பாடினராஇருக்கவே முடியாது. திருமால் வணக்கம் தமிழ்மண்ணில் தொன்மையாக இருக்க (மாயோன் மேய காடுறை உலகம் என்பது தொல்காப்பியம். மாயோன் என்பவன் தமிழ்க்கடவுள் அதாவது திருமால்.) ஒரு பன்னிருவர் மட்டும்தான் கிடைத்தனராபுரவலர் இல்லாவிட்டால் மாபெரும் புலவனும் மண்ணில் காணாமல் போவான் எனபது ஆங்கிலப்பாவலன் கிரே ''ஒரு கல்லறைத்தோட்டத்தில் பாடிய இரங்கற்பா''' என்ற கவிதையில் சொல்கிறான்.   கம்பருக்கும் கூட ஒரு திருவெண்ணைநல்லூர் சடையப்பச் செட்டியார் புரவலராக இருந்ததனால் இன்று நம்மிடையே வாழ்கிறாரன்றோ!  செட்டியார் இல்லையென்றால் கம்பராமாயணம் இல்லை :-) இப்பன்னிருவருக்காவது ஒருவர் கிடைத்தாரே என்று நம்மை நாமே தேற்றிக்கொள்ளலாம்.

பின்காலத்தில் ஒரு வைணவத்தலைவர் வந்தார். அவர் பெயர் இராமானுஜர். அவர் இந்துமதத்தில் ஒரு தத்துவத்தை உருவாக்கினார். அதன்பெயர் விசிஷ்டாத்வைதம்.  இது சங்கரரின் வேதாந்தத்திலும் சிறிது விலகியது; ஆனால் அவ்விலக்கமே புதிய தத்துவத்தின் உயிராகும்.  இவர் தன் தத்துவம் முன்சென்ற தொகுப்பாளரின் பாடல்களில் ஒலிக்கக்கண்டார்.  அப்பாடல்களின் மேல் தன் தத்துவத்தை ஏற்றி, அப்பன்னிருவருள் எவரின் பாடல்கள் தத்துவங்களை வெகுவாக‌ உள்ளடக்கியதே அவரையே அப்பன்னிருவரின் முதல்வராக்கினர். அவர்தான் நம்மாழ்வார். வைணவர்கள் என்ற குலத்துக்குத் தலைவர் எனவே குலபதி நம்மாழ்வாரே. இவர்கள் ஆழ்வார்கள் எனவழைக்கப்பட்டனர். திருமால் பக்தியில் ஆழங்கால் பட்டு தம்மை மறந்த நிலையில் பாடல்கள் எழுதினார்கள் எனவே ஆழ்வார்கள் என்ற பேர்.  இவர்கள் பாடல்கள் அனைத்தையுமே தம் புதிய மதத்தின் வழிபாட்டில் கட்டாயமாக்க, இப்பாடல்களின் புகழ் மென்மேலும் பெருகியது; அல்லது வெளித்தெரிந்தன‌.பின்னர் இராமானுஜர் செய்கைகள். வகுத்த கோயில் வழிபாட்டு முறைகள்; இப்பாடல்களுக்கு தன் சீடர்கள் சிலரை வைத்து எழுதிய விளக்கவுரைகள் - எல்லாமே சேர்ந்து வைணவ சம்பிராதாயம் என்ற பெயரில் உள்ளடக்காமானது.  மேலும் - நம்மாழ்வாரின் நான்கு நூல்கள் நான்கு வேதங்களில் சாரங்களென்றும்திருமங்கையாழ்வாரின் ஆறு நூல்கள் வேதங்களின் ஆறங்கங்களெனவும், ஏனைய ஆழ்வார்கள் எண்மர் நூல்கள் எட்டு உபாங்கஙகளெனவும் - அல்லது ஒத்த சிறப்புடையவை - என்பது ஆசாரிய சூர்ணிகை.  வைணவர்களுக்குச் சொன்னது.  விளக்கங்கள் - அல்லது வியாக்யானங்கள் - எழதிய இராமானுஜரின் சீடர்கள் - மற்ற வைணவ ஆசிரியர்கள் - இப்படி வேத சாரங்கள் எனபதை வலுப்படுத்தினார்கள். இராமாயணம், மஹாபாரதத்தோடு இணைத்து விளக்கங்கள் கூறினார்கள்.  ஆழ்வார்களில் நம்மாழ்வார் தத்துவஞானி என்றேன். எனவே அவரின் திருவாய்மொழி விளக்கத்தைப் பெறுவதில் முதலிடம் பெற்று புகழடைந்தது.  இதைக்கவனித்த பிராமணல்லாதோர் தாமும் விளக்கம் கொடுத்தனர். அவை 'தமிழர்' விளக்கம் எனவாயிற்று.  வைணவ ஆசாரியர்கள் (பிராமணர்கள்) கொடுத்தவை ''படிகள்'' எனவழைக்கப்பட்டன. மேற்சொன்ன வைணவ சம்பிரதாயம், படிகளையே ஏற்றது.  ஆனால் அப்படிகள்  மிகவும் கடினமான மணிப்பிரவாளத்தில் எழுதப்பட்டன.  மேலும் தனியன்கள் எனவழைக்கப்படும் பாடல்களையும் இப்புலவர்களின் பாடல்களோடு இணைத்தார்கள் வைணவ ஆசிரியர்கள் தாமே எழுதி..  தனியன் என்பது சிறப்புப்பாயிரம்.  இது வடமொழியிலும் தமிழிலும் யாக்கப்பட்டு இணைக்கப்பட்டது.  திருவாய்மொழிக்கும், பெரிய திருமொழிக்கும் கண்ணிநுண்சிறுத்தாம்புக்கும் இருமொழிகளிலும் தனியன்கள் சேர்க்கப்பட்டன.  உய்யக்கொண்டார் திருப்பாவைக்கும், திருக்குருகை காலப்பன் பேயாழ்வார் திருவ்ந்தாதிக்கும், மணக்கால் நம்பி பெருமாள் திருமொழிக்கும்  எழுதினார்கள். இராமானுஜர் வந்த காலத்தில் முழுத்தொகுப்புக்கும் தனியன்கள் எழுதப்பட்டு முடிந்ததுஇராமானுஜருக்குப் பின், 14ம் நூற்றாண்டில் ஒரு வைணவ ஆசிரியர் இப்பன்னிரு புலவர்களையும் தெய்வநிலைக்கேத்தினார். பெண்பால் புலவரை திருமாலின் மனையாட்டியின் (பூதேவி) அவதாரமாக்கினர்; ஆண்பால் புலவர்களையும் திருமாலின் திருமேனி, மற்றும் திருமால் ஆயுதங்கள், போன்றவைகளிலிருந்து அவதரித்தோர் என்றாக்கினார். இப்புலவர்கள் வாழ்க்கை வரலாறு இவ்வாறாக 500 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்படுகிறது குருபரம்பரா பிரபாவம் என்ற நூலாக‌.  இது வைணவ சம்பிராதயத்தின் அடிக்கல்லாகி திகழ்கிறது.  ஆக, சம்பிரதாயத்தை இராமானுஜர் மட்டுமன்று; பிறரும் வலுப்படுத்தினார்கள்

மெல்ல மெல்ல பன்னிரு தமிழ்ப்புலவர்களும் பெருவாரியான தமிழ்மக்கள் கூட்டத்தினரிடமிருந்து விலக்கப்பட்டு, சிறுவாரியான வைணவத்தமிழ்க்கூட்டத்தில் சென்றடைந்தார்கள். ஆயர்பாடியிலிருந்து அக்ரஹாரத்துக்குள் சென்றடைந்தாள் ஆண்டாள்; அல்லது அடைக்கப்பட்டாள். தமிழரின் பொதுச்சொத்தான இப்பன்னிரு புலவர்களும் ஒரு சிறிய கூட்டத்தின் தனிச்சொத்தாக்கப் பட்டதை.  தவறென்று சொல்லவில்லை; விளைவு ஒருவருக்கு இலாபம்; இன்னொருவருக்கு நட்டம் என்பதுதான் காட்டப்படுகிறது. உண்மையென்னவென்றால், தனியன்களுக்கு மட்டுமே இவ்வைணவர்கள் சொந்தக்காரர்கள். ஆழ்வார் பாடல்கள் யாராருக்குச் சொந்தம் என்பதே கேள்வி. அதாவது, இப்பாடலகளை மற்றவர் வாசிக்கலாம். ஆனால் அவை பெரும்பக்தியோடே வாசிக்கப்பட வேண்டும்; போற்றப்படவேண்டும். இதை எப்படி எல்லாத்தமிழரும் செய்ய முடியும்அவை தமிழ் இலக்கியத்தின் சிறப்பான பாடல்கள் என்றுதானே வாசிக்க முடியும்மேலும் அப்பாடல்களில் சொல்லப்பட்டிருப்பது எவையெவைஎன்பதை அவரவர் விருப்பத்திற்கேற்ப சொல்லிவிட முடியாது.  அப்படியே சொன்னாலும், அது வைணவருக்கு அதிர்ச்சியைத்தரக்கூடாது.   இப்பாடல்கள் நமக்கு என்ன சொல்கின்றன? அவைகளின் இறைச்சிகள் யாவை? என்பனவெல்லாம் வைணவர்கள் விருப்பப்படிதான் இருக்க வேண்டும்.  தடியெடுத்தவெனெல்லாம் தண்டல்காரன் ஆகக்கூடாது என்பது எழுதாக்கட்டளை;.  எட்டுகோடி தமிழ்மக்களுக்கா? இவர்களுக்கு மட்டும்தானா? என்பதுதான் சங்கடமான கேள்வி.

பக்திப் பாடல்கள் பக்தி இலக்கியமாக்கப்பட்டு, ஒரு மதக்கூட்டத்துக்கு மட்டுமே என்ற நிலையில்தமிழரின் பொதுச்சொத்து - புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டுவிட்டு, பட்டாவையும் அள்ளிக்கொண்டது போல‌ -  பறி போனது!.    இதே நிலை தொடர்கிறது. இந்நிலையின் நீட்சியே வைரமுத்து கிளப்பிவிட்ட சர்ச்சை.  இப்புலவர்களின் பாடல்களை வாசிக்கலாம்.  இவர்களின் வாழ்க்கையை (அப்பாடல்கள் மூலமாக)  ஆராயவே கூடாது.  ''குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன். நலங்களாய நற்கலைகள் நாவிலும் நவின்றிலேன்'' என்று ஏன் சொல்கிறார்? என்று கேட்கக்கூடாது.  சத்தம் காட்டாமல் வாசித்துவிட்டு வெளியே செல் என்று நூலகத்தில் செய்வது போல.  உனக்குரிமை இல்லவே இல்லை உன் விருப்பப்படி புரிய.  ‘' பாடல்களுக்கு பொழிப்புரை, பதவுரை, விளக்கவுரை எல்லாமே நாங்கள் எழுதிவைத்தவையேசிறிது விலகினாலோ எம்மனங்கள் புண்படும்!’’ 

நல்லவேளை, கம்பரின் காலம் இராமானுஜருக்குப் பின்.  எனவே அது வைணவ சம்பிரதாயத்தில் சேர்க்கப்படவில்லை.  கம்பராமாயாணம் ஒரு வைணவநூல்.  கம்பர் ஒரு பழுத்த வைணவர்.  திருவரங்கத்தில் அல்லவா இந்நூல் அரங்கேறியது!  எனினும் இது வைணவ சம்பிராதாயத்தில் சேர்க்கப்படவில்லை.  அதாவது கட்டாயம் ஆராதனையில் ஓதப்படவேண்டிய அவசியமில்லை. கம்பராமாயாணத்தை கம்பர் முழுமை செய்தாரா? இராமனை பிராமணனாக்கினாரா? என்றெல்லாம் கம்ப்ராமாயணத்தைப் பற்றி, பின்னர் கம்பரின் வாழ்க்கை பற்றியும் - கம்பரை ஏன் நாட்டைவிட்டு துரத்தினான் சோழன்? ஒட்டக்க்கூத்தருக்கும் இவருக்கும் என்ன பிரச்சினை? கம்பரின் மகன் சோழ இளவரசியை கவரப்பார்த்தானா? இல்லை அம்பிகாபதி என்ற பாத்திரமே புனைவா? என பலபல எல்லா வகை கேள்விகளையும் விமர்சகர்களும் பொதுமக்களும் வைக்கலாம்.  இந்துக்கள், குறிப்பாக வைணவர்கள் ஒன்றும் சொல்வதில்லை.  எனவேதான் ஒரு முசுலீம் அறிஞர் (மறைந்த நீதிபதி மு மு இசுமாயில்) கம்பராயாணத்தை ஆராய்ந்து ஒரு நெடுந்தொடரை வாராவாரம் ஆனந்த விகடனின் எழுத முடிந்தது.   ''கம்பனின் மறுபக்கம்'' என்ற விமர்சனத்தை புலவர் ஆ.பழநியால் வைக்க முடிகிறது.@

கம்பர் பிழைத்தார்.  பன்னிரு தமிழ்ப்புலவர்கள் மாட்டிக்கொண்டார்கள். 

@   ''கம்பரின் மறுபக்கம்''  புலவர் ஆ.பழனி (2016)  New Century Book House (P) Ltd. Rs.140/-  ( It's available in the ongoing Book Fair 2018 Chennai)